இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி

படம்: ஊடகம்

09 May 2025 - 5:59 pm

1 mins read

சென்னை: பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து, மே 10ஆம் தேதி, சென்னையில் தனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், சனிக்கிழமை (மே 10), முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் தனது தலைமையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் பேரணி இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் அர்ப்பணிப்பை போற்றுவதற்கும் தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.

“தமிழ்நாட்டு மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்,” என அரசு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்