புதுவை: ஐந்தாவது முறையாக புதுவை மாநில முதல்வராக, புதன்கிழமை (மே 13) பதவியேற்றார் திரு ரங்கசாமி.
இம்முறை அவரது தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது.
இக்கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, திரு ரங்கசாமி முதல்வராகவும் அவரது கட்சியைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
மூவருக்கும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், சந்தோஷ்ஜி, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எளிமைக்குப் பெயர்பெற்ற முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழா முடிந்து அங்கிருந்து சட்டமன்றம் வரை நடந்தே சென்றார்.
அங்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், முதல்வராகத் தன் பணிகளைத் தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஒரு வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றார்.

