சென்னை: சென்னை மாநகரல் சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற மாடுகளுக்காக பல இடங்களில் கொட்டகைகளைக் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை விபத்துகளும் மாடு முட்டி நடையர்கள் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மாடுகளுக்கென கொட்டகைகளை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 4,237 மாடுகளைப் பிடித்து, ரூ.92 லட்சத்து 4 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு 2,427 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, முதல்முறை பிடிபடும் மாடுகளுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், 2-வது முறையாக பிடிபடும் மாடுகளுக்கு அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் மாநகராட்சி உயர்த்தியது.
முதல்முறை பிடிபடும் கால்நடைகளை அடையாளம் காண கால்நடைகளின் உடலில் சிப் பொருத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் மாடுகள் சாலையில் சுற்றி திரிவது தொடர்ந்தது. அவற்றைப் பிடிப்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை.
இந்நிலையில் கால்நடை வளர்ப்போர், மாடுகளைக் கட்டுவதற்கு இடமில்லை என்ற
கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மாட்டுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.