சென்னை: சென்னை பல்லாவரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மாநகராட்சி தண்ணீரைக் குடித்த இருவர் பலியானார்கள். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் அவர்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
மேலும், உணவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சம்பவ இடத்தில் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருவர் இறந்ததற்குக் காரணம் தரமற்ற உணவா? குடிநீரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு (தவெக) காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைச் சந்திக்கவும் தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நிவாரணப் பொருள்கள் வழங்க பிற கட்சிகளை அனுமதித்த நிலையில், தங்களை மட்டும் காவல்துறை தடுத்து நிறுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

