சென்னை: தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக, மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி அளவானது, 3,280 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் பொருட்டு தமிழகத்தில் பரவலாக அரசு, தனியார் சார்பாக, அதிக எண்ணிக்கையிலான மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது.
நீர் மின் நிலையங்களைத் தமிழக மின் வாரியம் அமைத்துள்ளதாகவும் இதர மின் நிலையங்களைத் தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வகையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மேற்குறிப்பிட்ட மின் நிலையங்கள் மூலம், ஒட்டுமொத்தமாக 3,280 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது.
இது 2023 - 24 நிதியாண்டைவிட, 14%, அதாவது 396 கோடி யூனிட் அதிகம்.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு ஏக்கர் விலை குறைந்தது, 25 லட்சம் ரூபாயாக உள்ளது என்றும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, அம்மாநில அரசுகளே, மிகக்குறைந்த விலையில் நிலங்களை குத்தகைக்கு வழங்குகின்றன என்றும் தமிழக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அம்மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் செல்வதால், நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த தமிழகம், இரண்டாவது இடத்திற்குச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.