மதுரை: புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட பலவகை சத்துகளைக் கொண்ட மரபுவழி நெல்வகையான தில்லைநாயகம் நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும் என்று மேலூருக்கு அருகேயுள்ள மேலவளவுப் பகுதியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் உயிரியல் காரணிகள் உற்பத்தி நிலையம் சார்பில் மதுரையின் செந்நெல் தில்லைநாயகம் பகுப்பாய்வுக் கூட்டமும் உணவுத் திருவிழாவும் நடைபெற்றது.
அந்தப் பகுப்பாய்க்கூட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள இயற்கை விவசாயிகளும் விவசாயத்துறை ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி மருந்தியல் கல்லூரி இயற்கை மருந்து மூலகத்துறை உதவிப் பேராசிரியர் ஜி.சத்தியபாலன், தில்லைநாயகம் அரிசி குறித்த ஆய்வுபற்றி உரையாற்றினார். “புரதச் சத்து அதிகமுள்ள கறுப்புக்கவுனி அரிசியைப் போல் மதுரையின் பாரம்பரிய நெல்லான தில்லைநாயகம் அரிசியில் 7.15 விழுக்காடு புரதச்சத்து உள்ளது.
வாயுக்களையும் அணுச்செறிவையும் கொண்டு பகுப்பாய்வு செய்த ஆய்வறிக்கையின்படி இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய், இதய நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிகிறது.
இதில் குடலுக்கு இதமான சூழலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அத்துடன், தரமான மாவுச்சத்து 78.28 விழுக்காடு உள்ளது. உடலுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாது உப்புகள் செறிவாக இருக்கிறது.
கறுப்புக்கவுனியில் உள்ள தாவர உயிர் வேதிப்பொருள் இந்த அரிசியிலும் உள்ளது.
இதில், உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாக்கக் கூடிய தாவர உயிர் வேதிப்பொருள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, பலவகை சத்துகள் நிறைந்த தில்லைநாயகம் நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும் என்று பேராசிரியர் சத்தியபாலன் வலியுறுத்தினார்.