சென்னை: தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்துவருவது மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் நடப்பாண்டு அரிசி விளைச்சல் குறைந்துபோனதே விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரிசி உணவுகளும் அரிசியில் செய்யப்படும் தின்பண்டங்களும் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம்.
இந்நிலையில் அரிசி விலை உயர்வு பல்வேறு தரப்பினரைப் பாதித்துள்ளது.
கடந்த மாதம் ரூ.65க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி, தற்போது ரூ.80க்கு விற்பனையாகிறது.
பாபட்லா, ஆர்என்ஆர் ரக அரிசியின் விலை ரூ.55ல் இருந்து ரூ.70ஆக உயர்ந்துவிட்ட நிலையில், சீரகச் சம்பா ரூ.120ல் இருந்து ரூ.200ஆக உயர்ந்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ அரிசி விலை ரூ.10 முதல் ரூ.15 வரையும், 25 கிலோ மூட்டை அரிசி ரூ.250 முதல் ரூ.375 வரையும் அதிகரித்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நூறு மூட்டை அரிசி விளைவித்த விவசாயிகள், இப்போது இருபது மூட்டைதான் விளைவிக்கிறார்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட அரிசி வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவர் ஸ்ரீ ராம் மணி தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு மூட்டை நெல் ரூ. 1,700க்குக் கிடைத்த நிலையில் பற்றாக்குறையால் அதன் விலை தற்போது ரூ.2,200 முதல் ரூ.2,400 வரை உயர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

