புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அனைத்துலகப் புள்ளிவிவரங்களும் ஆய்வுகளும் தெரிவித்துள்ளன.
கொலை வழக்குகளில் 3.2 விழுக்காடு, கொள்ளை வழக்குகளில் 4.8 விழுக்காடு, வழிப்பறி வழக்குகளில் 5.6 விழுக்காடு, பாலியல் வழக்குகளில் 2.1 விழுக்காடு சிறார் குற்றவாளிகள் என்பது நடப்பாண்டிலும் தொடரும் நிலவரம்.
மேலும், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனையிலும் 5.3 விழுக்காடு சிறார்கள் சிக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களும் தொடர்ந்து சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதிசெய்துள்ளது.
கடந்த காலங்களில் வறுமையால் சிறார் குற்றவாளிகள் அதிகம் உருவாகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சிறார் குற்றங்களில் ஈடுபடுவோரில் 96 விழுக்காட்டினர் அத்தகைய நிலையில் இல்லை என்பது குற்ற வழக்குகளில் சிறார் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிறார் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஒரு சிலர் நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஒருமுறை குற்றவழக்கில் சிக்கியவரே மீண்டும் மீண்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வரும் நிலையும் உள்ளது.
மிக முக்கியமாக ஒருவரது குடும்பச் சூழல், வசிப்பிடம், சகாக்களின் தொடர்பு போன்றவை சிறார் குற்றவாளிகள் அதிகம் உருவாவதற்கு வழிவகுக்கிறது. சிறார் குற்றவாளிகள் உருவாவதற்கு இணைய வளர்ச்சியும் மிக முக்கியக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
15% சிறார்களுக்கு போதைப்பழக்கம்
இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 18 வயதுக்கு உட்பட்டோர் 33 விழுக்காட்டினர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்களின்படி இதில், 6 முதல் 7 விழுக்காட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் ஆண்கள் சராசரியாக 80 விழுக்காடு, பெண்கள் 20 விழுக்காடு.
தொடர்புடைய செய்திகள்
சிறார் குற்றப்பதிவுகளில் மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகாருக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 15 விழுக்காடு இளம் வயதினரிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 விழுக்காட்டினர் ஒருமுறையாவது போதைப்பொருளைப் பயன்படுத்தி உள்ளனர் என்றும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

