பீளமேடு: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்து பெறப்பட்ட பயணப் பெட்டி ஒன்றில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) காலை சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து அன்று கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை முடுக்கி விட்டனர். அனைத்துப் பயணிகளின் உடைமைகளைச் சோதித்துப் பார்த்ததில் யாரிடமும் பெரிய அளவில் தங்கம் இல்லை. அதன் பின்னர் விமானத்திற்குள் சென்று தேடிப் பார்த்தனர். அப்போது இருக்கைக்குக் கீழே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தைக் கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்ததில், தங்க பிஸ்கட்டுகள் இருப்பது தெரியவந்தது. அந்தத் தங்கத்தின் எடை 1,399 கிராம் என்றும் அதன் மதிப்பு ரூ.1 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி காலையில் ஷார்ஜாவில் வந்து இறங்கிய விமானத்தில் கைப்பற்றப்பட்ட அந்தத் தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களின் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், அரிய வகை பாம்புகள், உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.