சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நூறு கோடி ரூபாய் பணம் வசூலித்துப் பலரை ஏமாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
தடையில்லாச் சான்றிதழ் பெற ரூ. 5 லட்சம், தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறுவது, தர உயர்வு உள்ளிட்ட மற்ற சில அனுமதிகளைப் பெற்று தருவதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்ச பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்தப் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பி.டி. அரசகுமார் என்பவர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்கிற பெயரில் முறையாகப் பதிவு செய்யப்படாத ஒரு சங்கத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.
இந்தச் சங்கத்தின் மூலம் அவர் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூலித்து வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை உடனடியாக அவரைக் கைது செய்தது. இந்த மோசடி வழக்கில் அவர் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலித்த தொகைகள் குறித்தும் நிதி பரிவர்த்தனைகள் பற்றியும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

