சென்னை: தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆண்டுதோறும் சீரமைக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதற்காக, 2023-2024ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் குறிப்பிட்டார்.
“கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு குடமுழுக்கு நடத்தப்படும்.
ஏற்கெனவே 100 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 70 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்றார் சேகர்பாபு.
இந்த ஆண்டும் 100 கோவில்கள் குடமுழுக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், சுவாமி மலையில் மின்தூக்கி சீரமைக்கப்பட்டு வரும் ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.