சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு இந்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,087 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தமிழக ஊரக வளர்ச்சித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நடப்பு 2026-27ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), இத்திட்டத்தின்கீழ் 29.83 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 31.47 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.22 கோடி பணி நாள்கள் உருவாக்கப்பட்டு, ரூ.1,804 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் இத்திட்டத்திற்கு மாற்றாக ‘வளர்ச்சி அடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பணி நாள்கள், தொகையானது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதுவரை 81.39 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 103.18 லட்சம் ஊழியர்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,38,314 மாற்றுத்திறனாளிகளும் 581 திருநங்கைகளும் அடங்குவர்.
உருவாக்கப்பட்ட மொத்த பணி நாள்களில் 87.08 விழுக்காடு பெண்களாலும், 29.69 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பயனாளிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஊரக வளர்ச்சித் துறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,087 கோடி என உறுதிப்படுத்தி உள்ளது.
நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


