சென்னை: தமிழ்நாடு மின்னியல் பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உருவெடுத்து வருகிறது.
ஊழியர் போராட்டங்கள் இருந்தபோதிலும் சாம்சுங் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ 1,000 கோடியை மீண்டும் முதலீடு செய்துள்ளது தமிழ்நாட்டின் தொழில்துறை மீது நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்று தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா மணிகன்ட்ரோல் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய இடமாக, தமிழகம் உருவெடுத்து வருகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன என்றார் அவர்.
அதே நேரத்தில் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’க்கு போட்டியாக இருக்கக்கூடிய விண்வெளி தொழில்நுட்பத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களையும் அரசு ஆதரித்து வருகிறது. விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்த விரும்பும் உலகளாவிய நிறுவனங்களுக்கான விருப்பமான இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது என்றார் அவர்.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அதிக அளவு மின்னியல் சாதனங்கள், பிற உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மின்னணுச் சாதன உற்பத்தித் திட்டத்தை தமிழக அறிமுகம் செய்தது.
இதனால் தமிழ்நாட்டில் புதியதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை பெறுவதற்காக நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
2025ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மின்னியல் பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 41.2% என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதில் பல்வேறு புதிய தொழில்கள் வர உள்ளதாகவும் திரு ராஜா குறிப்பிட்டுள்ளார்.