லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை: ஸ்டாலின் கவலை

1 mins read
0256af67-e2af-4e60-9e4b-3019b76eb5e4
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஈடிவி பாரத்

சென்னை: அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை காணப்படுவதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு இளைஞர், மகளிர் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலான நீண்டகால தாக்கம் ஏற்படுகிறது என தமது கடிதத்தில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பு பாதிப்புகளை இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து களைய வேண்டும் என்றும் அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஜவுளி, ஆடைத்துறை ஏற்றுமதியின் அடித்தளமாக தமிழ்நாடு விளங்கி வருவதாகவும் வரி விதிப்பால் தமிழக ஏற்றுமதி துறையில் நெருக்கடி அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும் திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.

“அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்ட இடர்பாடு வெறும் பொருளியல் பின்னடைவு மட்டுமல்ல, ஈடு செய்ய முடியாத இழப்பு. நாட்டின் பின்னலாடை தலைநகரான திருப்பூரில் ஏற்றுமதியாளருக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

“பின்னலாடைத் துறையில் 30% வரை கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் உள்ள ஏற்றுமதியாளருக்கு தினமும் ரூ.60 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்