புதுச்சேரி: சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் அன்பு இல்லம் பெயரில் மோசடி செய்து, ஆடவரிடமிருந்து ரூபாய் 1 லட்சம் சுருட்டிய கும்பலைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சினோஜ். இவர் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஃபேஸ்புக்கில் அன்பு இல்லம் பெயரில் குழந்தை தத்தெடுப்பு குறித்த விளம்பரம் ஒன்றைக் கண்டு, அவர்களிடம் தொடர்பு கொண்டார். அவர்களும் சினோஜ்க்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தை அனுப்பி, நீங்கள் இதில் எந்தக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
மேலும், அவர்களது பேஸ்புக்கில் அன்பு இல்லம், பல்வேறு குழந்தைகளைத் தத்துக் கொடுத்தது போன்ற புகைப்படங்களும் இருந்தன. இதை நம்பி சினோஜும் குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தார்.
பிறகு அந்த இல்லம் சார்பில் தொடர்பு கொண்டவர்கள், பல்வேறு சட்ட நடவடிக்கைகள் இருக்கின்றன என்று கூறி, அவரிடமிருந்து1,07,000 ரூபாயைக் கடந்த ஒரு மாதமாக வாங்கி உள்ளனர்.
அதன்பிறகு அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சினோஜ் இணையக் குற்றத்தைக் கண்காணிக்கும் காவல் துறையிடம் புகார் அளித்தார்.
இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரங்களையும் நம்பி பொருள்களை வாங்கப் பணம் செலுத்த வேண்டாம் எனப் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

