சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாகப் பேசினார்.
இந்தச் சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜேஷ் என்பவர் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் பட்டாபிராம் காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

