சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் நேரடியாகவும் ஊடகங்களுக்குத் தெரியாமலும் பல்வேறு ரகசிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ரகசிய ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
அனைத்துக் கோவில்களிலும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் இதற்கான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டுப் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் கூறினார் அவர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் பராமரிப்பின்றி உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், சேதமடைந்த மண்டபங்கள், கோபுரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படும் என்றார்.
ஆன்மிகமும் தமிழும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்றும் அதைக் கவனத்தில் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துக் கோவில்களிலும் முக்கியமான பிரமுகர்களுக்கான சாமி தரிசன முறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

