திருச்சி: ஆடு மாடுகளுக்காக மாநாடு நடத்திய நாம் தமிழர் கட்சி, அடுத்து மரங்களுக்காக குரல் கொடுக்கும் என அக்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி இம்மாநாடு நடைபெறும் என்று அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
“ஆடு மாடு இல்லாமல் மண் வளம் பெறாது. அதனால்தான் மதுரை விரகனுாரில் கால்நடை மாநாடு நடத்தினேன். அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சார்பில் 10,000 மரங்களுக்கு மத்தியில் மாநாடு நடைபெறும்.
“மரங்களுக்காகப் பேசி, அவைகளுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறேன்,” என்றார் சீமான்.
தமிழகத்தில் விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் கொள்கைகளிலிருந்து திமுக அரசு எவ்விதத்திலும் மாறுபடவில்லை என்றார்.
மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் ஏன் பங்கு தருவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“ஓரணியில் தமிழகம் என்ற பெயரில், ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக இணைத்துள்ளதாக கூறும் திமுக, தேர்லின்போது வாக்குக்குப் பணம் கொடுக்காமல் இருக்குமா?
“மரங்கள் மாநாடு நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,” என்றார் சீமான்.