சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலைச் சந்திப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் தயாராகி வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வரும் சீமான் (படம்) இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டுள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்த போதிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்துக் கொண்டேவுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 விழுக்காட்டை தாண்டி வாக்கு வாங்கியது. இதனால் நாம் தமிழர் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், இதுபோன்ற சூழலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.
இப்படி கட்சி நிர்வாகிகள் விலகிச் செல்வது குறித்து கருத்து தெரிவித்த சீமான், கட்சியில் இருப்பதும் விலகிச் செல்வதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறியுள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகள் விலகிச் சென்ற போதிலும் அதுபற்றி கவலைப்படாமல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு சீமான் தயாராகி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார். இன்னும் சில நாள்களில் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை அவர் தொடங்கவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் “கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்களால் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு குறையப் போவதில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். அதற்கேற்ப கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள்,” என்று தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் களமிறங்குகிறார்.
இளைஞர்களின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக அளவில் செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரிய சவாலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

