சென்னை: தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பாட்டத்தைப் பயிற்றுவிக்க சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில் நிலையங்களில் உள்ள காலியிடங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் ரயில்வேக்கு வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தெற்கு ரயில்வேயின் முயற்சியால் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்காக நவீன வெளிப்புற விளையாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு இளையர்களும் சிறார்களும் விளையாடி மகிழலாம். அவர்களைக் கவரும் விதமாக பாக்ஸ் கிரிக்கெட், பிக்கிள்பால், ஸ்கேட்டிங் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலம்பு பயிற்சிக்காகத் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது என்றும் சிறார்களும் இளையர்களும் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளார் தேஜ் பிரதாப்சிங் தெரிவித்தார்.
“இதன்மூலம் சிலம்பக் கலையின் பெருமைகளை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பு அமையும். பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவம், அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்,” எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


