சென்னை: தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
”சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! என்று தம்முடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளதாகத் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன.
“கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
“இந்த இரு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாகத் தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.