திருவள்ளூர்: தந்தை பெயரில் உள்ள ரூ.2.50 கோடி காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக, பெற்ற மகன்களே பாம்பை விட்டு அவரைக் கடிக்க வைத்து கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக திருவள்ளூரில் ஆறு பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டையைச் சேர்ந்த கணேசன் (56 வயது), அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அவரது வீட்டு குளியலறையில் அவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்பட்டது.
காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், இறந்த கணேசனின் இரு மகன்களான மோகன்ராஜ், ஹரிகரன் ஆகியோர் தந்தையின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு இருந்த தொகையைப் பெற விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், கணேசனின் மரணம் குறித்து சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், காவல்துறையில் புகார் அளித்தது.
இதையடுத்து, காவல்துறை நடத்திய தீவிர விசாரணையின்போது கணேசனை அவரது மகன்களே கொலை செய்தது தெரிய வந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பே நல்ல பாம்பை வைத்து தந்தை கணேசனைக் கடிக்க வைத்ததாகவும் அதில் அவர் இறக்கவில்லை என்றும் இரு மகன்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அரக்கோணத்தைச் சேர்ந்த நான்கு நண்பர்களின் துணையோடு அதிக நச்சுத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் கணேசன். அப்போது பாம்பை விட்டு அவரது கழுத்தில் கடிக்க வைத்து இரு மகன்களும் கொலை செய்தனர். பின்னர் குளியலறையில் அவர் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி உள்ளனர்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து கொலையில் தொடர்புள்ள ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் நிறைய கடன்கள் இருந்ததால் அவற்றைத் தீர்க்க தந்தையைத் தீர்த்துக்கட்டியுள்ளனர்.

