சென்னை: பயணிகளுக்கான சேவை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய ரயில்வேயின் ஓர் அங்கமான தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், பயணிகளுக்குச் சிறப்பான சேவை அளித்து, தெற்கு ரயில்வே ரூ.8,271.47 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது இந்திய ரயில்வேயின் மற்ற மண்டலங்களைவிட அதிகமாகும்.
இதற்கு முந்தைய நிதியாண்டைவிட இது ரூ.735.78 கோடி (9.8%) அதிகமாகும். மேற்கு, மத்திய ரயில்வே முறையே 2, 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.
கடந்த நிதியாண்டில், தெற்கு ரயில்வே 229 சிறப்பு ரயில்களை இயக்கி 2,513 பயணங்களை மேற்கொண்டது. இதன் மூலம் 32.97 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு பயனடைந்தனர்.
ஒவ்வொரு பயணத்திலும் சராசரியாக 1,312 பயணிகள் இடம்பெற்ற வகையில், தேசிய அளவில் (சராசரியாக 894 பயணிகள்) முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டிலும் ரயில் இருக்கை முன்பதிவில் தெற்கு ரயில்வே முதலிடத்தில் நீடித்தது.

