மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்: ஊடகம்

27 Jan 2025 - 7:46 pm

1 mins read

புதுடெல்லி: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியான சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான கருத்துகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்டவரை பழிவாங்குவதை சமூகம் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை தவறாகச் சித்திரிப்பது, குற்றவாளிகளைப் பாதுகாக்க வழிவகுக்கும் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவி மீது பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காரணமாக இருந்தவர்களிடமிருந்து அந்த இழப்பீட்டைப் பெற்று மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல் தகவல் அறிக்கைக்கு விவரங்களைக் கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆலோசனை அளித்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்