ராமேசுவரம்: ராமேசுவரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
வங்கக் கடலில் மீன்பிடி தடைக்காலம் இரண்டு மாதம் நீடித்தது. ஜூன் 15ஆம் தேதி அந்தத் தடைக்காலம் நிறைவடைந்ததும் மறுநாளே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வங்கக் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
அவர்களில் எட்டுப் பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
மீன்பிடித் தடைக்காலம் நிறைவுற்று இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அதற்குள், இருமுறை அவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
தற்போது இலங்கைக் கடற்படை அந்த மீனவர்களைக் கைது செய்திருக்கிறது.
வேர்க்கோடு, மண்டபம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை (ஜூன் 28) 466 படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
அவற்றில் ஒரு படகில் சென்ற ஜேசு (39), என்.அண்ணாமலை (55), கல்யாணராமன் (45), சையது இப்ராஹிம் (35), செல்வம் (29), காந்திவேல் மற்றும் இரு மீனவர்கள் உள்பட எட்டுப் பேர் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

