நாகப்பட்டினம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அறுவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி, காயப்படுத்தி பொருள்களைக் களவாடிச் சென்றனர்.
நாகை நம்பியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு (60) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகியோர் ஞாயிறு மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 2 படகுகளில் வந்த எட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களைக் கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளிச் சங்கிலி, மோட்டார் என்ஜின், கைத்தொலைபேசி போன்ற பொருள்களைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோரப் பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.