சென்னை: போதைப்பொருள் புழக்க விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிணை கோரி மனு செய்தனர். அந்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) நீதிபதி நிர்மல்குமார்முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “எதிர்த்தரப்பு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை,” என ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
நடிகர் கிருஷ்ணா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை,” எனத் தெரிவித்தார்.
அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரையும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ரூ.10 ஆயிரம் சொந்த பிணை, அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

