சென்னை: இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஜவுளித்துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், மோட்டார்துறை உள்ளிட்ட துறைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய 25% வரி, அதன் தொடர்ச்சியாக 50% வரி என்ற அதிகரிப்பு காரணமாக, கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் இப்பிரச்சினை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
“எனவே, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.