சென்னை: சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை - சிஐடி நகரை இணைக்கும் வகையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 30) திறந்து வைத்தார்.
அப்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடுமையான நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை திநகர் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் சென்னையின் முதல் இரும்பு மேம்பாலமாகும்.
இதில், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 40,000 வாகனங்கள் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாலத்திற்கான பணிகள் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி. ஆ. ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.