சென்னை: தமிழகத்துக்கான மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத்தொகை வழங்கிட இந்தத் திட்டம் வழிவகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய. திட்டத்தின் மூலம் ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணியில் விளங்குவதாகவும் மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்க குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும் தமிழக அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 தனை அறிமுகப்படுத்தியது என்றும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மத்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சு, மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத்தின்கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்துக்கு ஈர்த்திடும் வகையில், மத்திய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழக அரசும் ஊக்கத் தொகை வழங்கிட இந்தத் திட்டம் வழிவகை செய்யும்,” என்று தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.