ஈரோடு: காலஞ்சென்ற பழம்பெரும் பாடகியும் நடிகையுமான கே.பி. சுந்தராம்பாளுக்கு தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
‘பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள சுந்தராம்பாளுக்கு அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) திறந்துவைத்தார்.
நாடக நடிகையாகப் பிரபலமடைந்த கே.பி. சுந்தராம்பாள், ஒரு காலகட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று அந்நாள்களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.
கடந்த 1969ஆம் ஆண்டு புகழின் உச்சியில் இருந்தபோது சொந்த ஊரான கொடுமுடியில் சொந்தமாக திரையரங்கம் கட்டிய கே.பி. சுந்தராம்பாள், அதன் திறப்பு விழாவுக்கு அப்போது முன்னணிக் கலைஞர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை அழைத்துவரும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.
இந்நிலையில், கே.பி. சுந்தராம்பாளுக்கு காலதாமதம் இன்றி சிலை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, இதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி கூறியுள்ளார்.
சிலைத்திறப்பு நிகழ்ச்சியில் கே.பி. சுந்தராம்பாளின் உறவினர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


