தமிழ்நாட்டில் விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டி யிடப்போவது உறுதியாகிவிட்டது. அந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா, புதுவை ரங்கசாமியின் கட்சி, டி கிருஷ்ணமூர்த்தியின் கட்சி ஆகியவையும் சேர்ந்து இருக்கின்றன. கூட்டணியில் அதிமுக 25 இடங்களி லும் பாஜக 15 இடங்களிலும் போட்டியிடும் என்று முடிவாகி இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள தொகுதிகளில் இருந்து இதர கட்சிகளுக்கு தங்கள் விருப்பப்படி தொகுதிகளை ஒதுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மத் திய அமைச்சர் கோயலுடன் வியாழக் கிழமை மூன்று மணி நேரம் பேசினர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஒரு தரப்பு, இந்த விவரங்களைத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் குறிப்பிட்டு இருக்கிறது. பாஜக எட்டு தொகுதிகளில் போட்டி யிடும் என்றும் பாமகவுக்கு நான்கு தொகுதிகளும் தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகளும் கொடுக்கப்படும் என்றும் அந்தத் தகவல் வட்டாரம் குறிப்பிட்டது. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பெரும் கூட்டணியை அமைக்க முடிவாகி விட்டது என்று அந்தத் தகவல் வட்டாரம் கூறியது. தொகுதிகள் தொடர்பில் அடுத்த சுற்று பேச்சு நடக்கும் என்றும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் அந்த வட்டாரம் மேலும் குறிப்பிட்டது. அதற்குப் பிறகு கூட்டணி பற்றிய முறையான அறிவிப்பு இடம்பெறும். அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெறக் கூடிய சில கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாது என்றும் தெரிகிறது.