தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடனும் (சிபிஐ) விடுதலைச் சிறுத்தைக் கட்சியுடனும் தேர்தல் இட ஒப்பந்தங்களில் இணைந்துள்ளது. இந்தியாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஒப்பந்தங்களின்படி, கம்யூனிஸ்டு கட்சியும் விடுதலை சிறுத்தைக் கட்சியும் தலா இரண்டு இடங்கள் பெறுகின்றன. தனது கட்சிக்கான இரண்டு இடங்கள் என்னென்ன என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தேர்தலில் தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்துவதா அல்லது திமுகவின் சின்னத்தைப் பயன்படுத்துவதா என்பதை கட்சி முடிவு செய்யும் என்றார் அவர்.
திமுகவுடனான பேச்சுவார்த்தையின் முதல் சுற்று சுமுகமாக முடிந்த நிலையில் இரண்டாது சுற்றுக்குப் பின்னர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதை சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் தெரிவித்தார். கட்சி தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் கூறினார். தமிழகச் சட்டசபையில் தற்போது காலியாக இருக்கும் 21 இடங்களில் ஏற்படவுள்ள இடைத்தேர்தல்களில் சிபிஐ திமுகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் என்றும் முத்தரசன் சொன்னார்.