தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களைத் தொடர்ந்து சந்தித்து வாக்கு கேட்டு வருவதாகக் கூறிய பழனிசாமி, தனது கட்சியை அவர்கள் ஆதரிப்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாகத் தெரிவித்தார்.
அதிமுக தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று கூறிய பழனிசாமி, தனக்கு எதிராகப் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை உண்மைக்கு மாறான அறிக்கை எனச் சாடினார். "இவர்கள் அறிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேறாது," என்று அவர் கூறினார். திமுக எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும் அவை அத்தனையையும் முறியடிக்கும் சக்தி அதிகமுகவுக்கு உண்டு என அவர் சூளுரைத்தார்.
மேலும், "கரும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாக" மக்களின் நல்லபிமானத்தை இழந்துவரும் கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி வைப்பதாக அவர் குறைகூறினார்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித் தலைவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை வேட்பாளராக நிறுத்தும் முடிவை ஸ்டாலின் தற்காத்துப் பேசியுள்ளார். ரத்த பந்தங்களைக் காரணமாகக் காட்டி திறமையானவர்களை நிராகரிக்கக் கூடாது என்று அவர் நேற்று கூறினார். அத்துடன், தனது கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.