பிரபல காணொளிச் செயலியான 'டிக் டொக்' மீதான தடையை ரத்து செய்ய தமிழக உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த 'பைட்டான்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் முன்வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் அதன் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
வண்ண உயிரோவியங்களுடன் சின்னஞ்சிறு காணொளிகளை உருவாக்கிப் பகிர்வதற்குப் பயன்படும் இச்செயலி இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஆயினும், ஆபாசப் படைப்புகள் இந்தச் செயலி மூலம் பரவுவதாகச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய பரவலால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதையும் அவர்கள் சுட்டினர். இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றது.
தடை உத்தரவை ரத்து செய்ய 'பைட்டான்ஸ் டெக்னாலஜி' கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டிருந்தது. உச்ச நீதிமன்றமோ அந்த வழக்கை மாநில நீதிமன்றத்திற்கு மீண்டும் தள்ளியது. வழக்கை மறுபடியும் விசாரித்த மாநில நீதிமன்றம், அந்நிறுவனத்தின் வேண்டுகோளைத் திட்டவட்டமாக மறுத்தது.