மதுரை: கைதிகள், போலிசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மதுரை மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறையில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது இம்மோதல் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள், போதைப்பொருட்கள் ஆகியவற்றை கைதிகள் பயன்படுத்துகின்றனரா என்பதை கண்டறிய சிறை போலிசார் அவ்வப்போது சோதனை மேற்கொள்வர்.
அந்த வகையில் நேற்று மதுரை சிறையில் போலிசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது இரு கைதிகள் பொருட்களை ஒளித்து வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர்களை போலிசார் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு சக கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து கூடுதல் போலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

