சென்னை: பூந்தமல்லியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் தனுகா ரோஷன் என்பவர் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் கியூபிரிவு அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் பூந்தமல்லி காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியதில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் அவர் தப்பி வந்தது தெரியவந்தது.
அவரிடம் போலி ஆதார் அட்டை இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு சட்டப்பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.