சென்னை: தமிழகத்தில் ஒருமொழி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப் பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்று வந்த தேர்வு, பாடச்சுமையை காரணம் காட்டி 600 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டும் நடப்பாண்டும் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த 600 மதிப்பெண்களையும் 500ஆகக் குறைக்க இருப்பதாகவும் அதற்காக ஆங்கிலம் அல்லது தமிழைத் தேர்ந் தெடுக்கும் ஒருமொழி பாடத்திட்டத்தை கொண்டுவர பள்ளி கல்வித் துறை ஏற்பாடு செய்து வருவதாகவும் நேற்று முன்தினம் பிற்பகலில் செய்தி பரவியது.
மொழிப்பாடங்களில் முதல் தாள், 2ஆம் தாள் என்பதை ஒரே தாளாக மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இதனால், பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை நீக்க சதி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்ப் பயிர் ஆயிரமா யிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர் கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம். பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய் மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம். மனைவி என்பவள் தான் விருப்பம்.
"தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது," என்று கூறி இருந் தார்.
ஆனால், ஒருமொழி பாடத்திட்டம் என்னும் தகவலில் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகை யில்,‚"11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆறு பாடங்கள் உள்ளன. மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியைத் தேர்வு செய்ய பள்ளி கல்வித்துறை பரிந் துரைத்துள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.
"பாடங்கள் குறைக்கப்படாது. அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவே இல்லை. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.