சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தமிழர்கள் என்பதாலேயே தாமதிக்கப்படுகிறதோ என்ற ஐயம் அதிகமாவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுதச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற ஏழு தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரைப்பட நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் புதல்வருமான சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
குண்டுவெடிப்பில் அவருக்குத் தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்திருந்த சஞ்சய் தத், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார் என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள புனே சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சயைத் தாங்களே விடுதலை செய்ததாகத் தெரிவித்திருக்கிறது.