தமிழகச் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் ராஜா என்பவர் மர்ம நபர்களால் திடீரென கடத்தப்பட்டார். செந்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது காரில் வந்த சிலர் அவரை இடைமறித்து வல்லந்தமாக இழுத்துச் சென்றதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.
மாற்றுத்திறனாளி எனக் கூறப்படும் செந்திலை போலிசார் தீவிர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தனர். அவரது கடத்தலின் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கடத்தல்காரர்களிடம் செந்தில் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காதது இதற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

