சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க உள்ளது.
இதற்கிடையே புதிய அமைச்ச ரவையில் இடம்பெறப்போகும் நபர்கள் பற்றி மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான அமைச்சர்கள் பாஜகவைச் சேர்ந்த வர்களாக இருந்தாலும், கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகி யுள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் உள்ள 38 இடங்களில் அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, அதிமுக வுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இடம் அளிக்க மோடி முடிவு செய்துள்ளார்.
அந்த ஒருவர் யார் என்பதைத் தெரிவிக்கும்படி எடப்பாடி பழனி சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரிடம் பாஜக கோரியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருவருக்கு அமைச்சர் பதவி தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு ஒரு பதவி கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒரு வரான வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேலவையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக்க தமிழக முதல்வர் பழனிசாமி முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப் படுகிறது.
மக்களவையில் அதிமுகவுக்கு ஓர் இடம் மட்டுமே கிடைத் திருந்தாலும் மாநிலங்களவையில் தற்போது அதிமுகவுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர்.
அங்கு அதிமுகவின் தயவு பாரதிய ஜனதாவுக்குத் தேவை என்ற நிலை இருப்பதால் அதிமுகவுக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாமகவைச் சேர்ந்த டாக்டர் அன்புமணியையும் மேலவை எம்.பி. என்ற அந்தஸ் துடன் சுகாதாரத்துறை அமைச் சராக்க முயற்சி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாமகவின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றுமா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.