தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்

2 mins read

சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைத் திறந்து வைப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின், 'கடைகள், நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்­கான நிபந்தனைகள்)' சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது.

அதன்படி திரை­யரங்குகள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறைத் தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்துவதற்கு ஏற்ப வழிவகை செய்யப்பட்டது.

இந்தியாவில் அந்த மசோதாவை முதலில் அமல்படுத்திய மாநிலம் மகாராஷ்­டிர மாநிலமாகும்.

2018ஆம் ஆண்டு முதல் அங்கு கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வரை ஓராண்டுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அரசுக்குத் தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களைத் திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.

அந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதற்கான வரைவு அறிவிப்பாணை வெளி­யிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்பதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளிடப்பட்டது.

இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.