திருவண்ணாமலை: உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி தூய்மை அருணை இயக்கம் சார்பில் 10,000 மரக்கன்று நடும் விழா திருவண்ணாமலை
வ.உ.சி. நகரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்று நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
"கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை இந்தியாவிற்குக் கிடைத்த பெரும் கொடையாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலையை யுனஸ்கோ, வரலாற்றுச் சின்னமாக அறிவித்துள்ளது. ஆனால் அதனை முழுமையாக நாம் பராமரிக்கவில்லை.
தீ விபத்து, மரங்களை வெட்டுவதன் மூலம் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் அதிகளவில் மரங் களை நட்டு நீர்வளத்தையும் பசுமையையும் பாதுகாக்க வேண்டும்.
நாம் நடும் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு உயிர்க்காற்றுக் குழாய் போல நம் உயிர்காக்கும் தோழனாக இருக்கும். நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு உயிர்க்காற்று தேவை. எனவே தான் ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தூய்மை அருணை சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

