சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வந்தவர் சமூக ஆர்வலர் முகிலன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. காவல்துறை உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்குக் காரணம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். இவற்றை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். அன்றிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பின் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
முகிலன் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முகிலனை கண்டு பிடித்துத் தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. அவர் குறித்த தகவலை வெளியிட்டால் விசாரணை பாதிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.