சென்னை: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டுக்கோட்டை மாணவி வைஸ்யா, திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ ஆகியோர் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி பெறாத மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இந்த 'நீட்' காவு வாங்கப் போகிறது? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கறுக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?
"பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்," என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சிக்க வேண்டுமே தவிர தற்கொலை தீர்வு ஆகாது எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜனின் டுவிட் பதிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. "தமிழக மாணவர்களை படுகொலை செய்துவிட்டீர்கள்; அவர்களைக் கொலை செய்துவிட்டு தற்கொலை எனப் பேசாதீர்கள்" என தமிழிசையின் டுவிட்டில் பெரும்பான்மையானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக தங்களது கடும் கோபத்தை ஒவ்வொருவரும் ஆவேசத்துடன் தமிழிசையின் டுவிட்டர் பதிவுக்குப் பதில் தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் நுழைவுத் தேர்வை அடியோடு ரத்துச் செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் மத்திய பாஜக அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

