சென்னை: “உஸ்ஸ்... யாரும் அழப்படாது, நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுனா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்” என்று உள்ளே மோடி, அமித்ஷா சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போலவும், வெளியே ஓ.பி.எஸ், இ.பி.எஸ் காத்திருப்பது போலவும் கார்ட்டூன் வெளியிடப்பட்டு அதிமுகவை சீண்டியிருந்தது துக்ளக் பத்திரிகை.
நகைச்சுவை நடிகர் சோ துக்ளக் ஆசிரியராக இருந்தபோது இதுபோன்ற தரம் தாழ்ந்த கார்ட்டூன் விமர்சனங்கள் அப்பத்திரிகையில் வெளியானதில்லை என்று துக்ளக்கின் இப்போதைய ஆசிரியர் குருமூர்த்திக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் விமர்சிக்கத் தொடங்கினால் குருமூர்த்தி தாங்கமாட்டார் என்று எச்சரித்துள்ளார்.
‘துக்ளக்’ பத்திரிகையில் அதிமுக குறித்து வெளியான கார்ட்டூன் குறித்துக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், குருமூர்த்திக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை.
பத்திரிகை ஆசிரியர்கள் விமர்சிப்பதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. ஆனால் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று சொன்னால், நாங்கள் விமர்சனம் செய்தால் குருமூர்த்தி தாங்கமாட்டார். அது மட்டும் நிச்சயம். அந்தக் கார்ட்டூனில் யாரைக் குறை சொல்கிறார்? பாஜக அமைச்சர்களைக் குறைகூறுவதாக உள்ளது.
ஏற்கெனவே அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் எனக் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுக தலைவர்களை விமர்சித்திருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கந்தல் துணிதான் காற்றில் ஆடும் பட்டுத்துணி பெட்டிக்குள்தான் இருக்கும்.
கந்தல் துணி தான் காற்றில் ஆடும், நிறை குடம் தழும்பாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் துக்ளக் குருமூர்த்தியை விமர்சித்தார். மேலும் குருமூர்த்தி அடக்கி வாசிப்பது அவருக்கு நல்லது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஏற்கெனவே அதிமுக தலைவர்களை ஆண்மையில்லாதவர்கள் என குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுக தலைவர்களை விமர்சித்திருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அதிமுகவிற்கு அவமானமாக பார்க்கப்பட்ட நிலையில், இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. "அதிமுக தொடங்கப்பட்டு 42 ஆண்டுகளில், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது.
"அதில் தற்போது ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றிபெற்று, ஆட்சியைத் தொடர்கிறது. ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்பு, துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தையும் கழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது.
"சோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக் கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.
எனவே இதுபோன்ற நாலாந்திர விமர்சனங்களுக்குக் கழக சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்துபோவது ஒன்றே, நமது பதிலடி," என்று 'நமது அம்மா' இதழ் குறிப்பிட்டுள்ளது.