திருச்சி: திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை தமிழ் ஆர்வலர்கள் கறுப்பு மையால் அழித்துள்ளனர். இதுபோன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் இயங்கும் அலுவலகங்கள் பலவற்றிலும் இந்தி மொழி அழிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலுள்ள பாரத் பாரத மிகு மின் நிலையம், துப்பாக்கி தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள், அனைத்துலக விமான நிலையம், அகில இந்திய வானொலி, ரயில் நிலையம், வருமான வரித்துறை, சுங்கத்துறை, தொலைதொடர்பு துறை, அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்வதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழிக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

