சென்னை: மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து முதல் கட்டமாக 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார். மாணவி ஜீவிதா நீட்டில் வெற்றிபெற்றதை அடுத்து, அவரது மருத்துவப் படிப்பிற்கு உதவுவதாகத் தமிழிசை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை வாழ்த்துத் தெரிவித்து, நிதியை வழங்கினார். இதற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், எல்லாத் தரப்பு மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை ஜீவிதா நிரூபித்துள்ளதாகவும் தான் மருத்துவராகப் பணியாற்றி கிடைத்த பணத்தின் சேமிப்பில் இருந்துதான் ஜீவிதாவுக்கு நிதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.