வேலூர்: வரதட்சணை கேட்டு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முதியவர் ஒருவரைத் தாக்கிய காவல்துறை பெண் உதவி ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. மனித உரிமை ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வேலூரைச் சேர்ந்த சுப்பிரமணி யின் மகன் முரளி 2007ஆம் ஆண்டு தனது சகோதரி மகள் பவானியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனிக் குடித்தனம் சென்றனர்.
இந்நிலையில் சில ஆண்டுக ளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார் பவானி. அச்சமயம் தனது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவர் போலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து சுப்பிரமணி, அவரது மகன் முரளி உள்ளிட் டோர் முன்பிணை பெற்றனர்.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு தனது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஜனார்த்தனி, தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் தம்மை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச் சென்றதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார் சுப்பிரமணி.
மேலும் தனது மனைவி, மகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று குற்றவாளி களைப்போல் நடத்தியதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம் ஜனார்த்தினி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உறுதி செய்து, ஐம்பதாயிரம் ரூபாய் அப ராதம் விதித்தது.
ஜனார்த்தனி ஓய்வுபெற்றுவிட்ட தால் அவரது ஓய்வூதியத்தில் இருந்து இந்தத் தொகையை பிடித்தம் செய்து சுப்பிரமணிக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.