காவிரிப் பிரச்சினையில் முதல்வர் பழனிசாமி அக்கறை காட்டவில்லை

காவிரிப் பிரச்சினையில் முதல்வர் பழனிசாமி அக்கறை காட்டவில்லை

2 mins read

திருச்சி: காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கறை காட்ட வில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

எட்டுத் தட பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் ஆர்வத்தை காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதல் வர் காட்டாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதே காலஞ்சென்ற திமுக தலைவர் கருணாநிதிக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றார் ஸ்டாலின்.

"காவிரி ஆணையமா, கர்நாடக ஆணையமா என்று கேட்கும் அளவிற்குத்தான் அந்த ஆணையம் செயல்படுகிறது. முழுமையாக கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுவதை ஏற்க இயலாது. ஆனால் முதல்வர் எடப் பாடி பழனிசாமியோ இதுகுறித்து கவலைப்படவில்லை.

"திமுக கூட்டணியில் 38 பேர் எம்பிக்கள் ஆகி இருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள். மும்மொழித் திட்டம் என்கிற பெயரில் தமிழகத்தில் நிகழ்த்தப் பட இருந்த இந்தி திணிப்பை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே திமுக கூட்டணியினர் விரட்டியுள்ளனர்," என்றார் ஸ்டாலின்.

இந்நிலையில், கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதய நிதி ஸ்டாலின், எந்தவித பதவி, பொறுப்புகளையும் எதிர்பார்த்து தாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்றார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை வெற்றிபெற வைத்து முதல்வர் ஆக்குவதுதான் தமது முதல் வேலை என்றும் அவர் தெரிவித்தார்.

இதே கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.